கொவிட்-19 ஒருவரை இரு முறை தாக்குமாம்

கொவிட்-19 ஒருவரை இரு முறை தாக்குமாம்

(UTV | ஜெனீவா) – முதல் முறை தொற்று ஏற்பட்டு, 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு ஆன பின்னர் அதே நபர் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உலகளாவிய தொற்று நோயாக விஸ்வரூபம் எடுத்துள்ள கொவிட்-19 வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் மில்லியன் டொலர் கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது.

அது கொவிட்-19 வைரஸ் தாக்கி சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து விட்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதா என்பதுதான்.

இது விஞ்ஞானிகளுக்கே இன்னும் உறுதியாக தெரியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. அதே நேரத்தில் மீண்டும் தாக்குவதற்கு சாத்தியம் இல்லை என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இதையொட்டி சுகாதார வல்லுனர்கள் கூறுவது என்னவென்றால், கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதுதான்.

ஆனால் இந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் அவர்களுக்கு மீண்டும் கொரோனா தாக்குவதில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் அல்லது அந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை என்கிறார்கள் சுகாதார வல்லுனர்கள்.

இது குறித்து வல்லுனர்கள் சொல்லும்போது, மக்கள் ஒரே நோய்த்தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது பரிசோதனை அறிக்கைகள் தவறாக அமையலாம் என்கிறார்கள்.

விஞ்ஞானிகளை பொறுத்தமட்டில், ஒருவருக்கு மீண்டும் கொவிட்-19 தொற்று உறுதி என தெரிய வந்தபின்னர் அவர்கள், மற்றவர்களுக்கு தொற்றை பரப்பியதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்று எதுவும் இல்லை என்பதாகவும் இருக்கிறது. எனவே ஒருவருக்கு மீண்டும் கொவிட்-19 வந்தால், அதை அவர் மற்றவர்களுக்கு பரப்பும் ஆபத்து இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

இதுபற்றி பாஸ்டன் மருத்துவ கல்லூரி உலக பொது சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் பிலிப் லாண்ட்ரிகன் கூறும்போது, “முதல் முறை தொற்று ஏற்பட்டு, 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு ஆன பின்னர் அதே நபர் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது இப்போதுதான் வளர்ந்து வருகிற அறிவியல்” என்று சொல்கிறார்.

கடந்த வாரம் வெளியான அமெரிக்க ஆய்வு, லேசான தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள், சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும், அவர்கள் மீண்டும் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளன.

ஆனால் ஆன்டிபாடிகள் மட்டுமே வைரசுக்கு எதிரான ஒரே பாதுகாப்பு அல்ல. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளும் பாதுகாப்பை வழங்க உதவும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரை மீண்டும் தாக்குமா என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததுதான். அப்படி மீண்டும் வருமேயானால் அது, “நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட் இருக்கிறது (நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்), பணிக்கு செல்லலாம்” என்ற கருத்தை பாதிப்பதாக அமையும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )