போருக்கு மத்தியிலும் சிம்பா சிங்கம் பாதுகாப்பாக ருமேனியா நாட்டுக்கு

போருக்கு மத்தியிலும் சிம்பா சிங்கம் பாதுகாப்பாக ருமேனியா நாட்டுக்கு

(UTV |  கீவ்) – உக்ரைனில் இருந்து நான்கு நாட்கள் பயணத்துக்கு பிறகு சிம்பா சிங்கம் மற்றும் ஓநாய் பாதுகாப்பாக ருமேனியா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் அந்நாட்டின் அனைத்து நகரங்களும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.

உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்க பாதை, பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

போரால் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அவைகள் தவித்து வருகின்றன. விலங்குகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்கவில்லை.

தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜிபோரிஜியாவில் மிருகக்காட்சி சாலையில் சிம்பா என்ற சிங்கம் பராமரிக்கப்பட்டது. போர் காரணமாக சிங்கத்தை ருமேனியாவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதேபோல் அனகலா என்று பெயரிடப்பட்ட ஓநாயையும் கொண்டு செல்லும் ஏற்பாடுகளை விலங்குகள் உரிமை குழு மேற்கொண்டது.

இதையடுத்து சிம்பா சிங்கம் மற்றும் ஓநாய் கூண்டுகளில் அடைக்கப்பட்டது. பின்னர் அந்த கூண்டுகள் வேனில் ஏற்றப்பட்டு ருமேனியாவுக்கு புறப்பட்டது. போர் சூழலில், ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளில் பயணத்தை மேற்கொண்டனர். நான்கு நாட்கள் பயணத்துக்கு பிறகு சிங்கம் மற்றும் ஓநாய் பாதுகாப்பாக ருமேனியா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்குள்ள ராடெவுட்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் இரு விலங்குகளும் பராமரிக்கப்படுகிறது.

இதுகுறித்து விலங்கு உரிமை குழுவின் செபாஸ்டியன் தரலுங்கா கூறும்போது, “அந்த விலங்குகளை போரில் இருந்து வெளியே கொண்டு வர முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். பல விலங்கு உரிமை குழுக்கள் மற்றும் மக்களின் முயற்சிகள், ஒத்துழைப்பு காரணமாக பெரிய விலங்குகளை வெளியேற்றுவது சாத்தியமானது.

ருமேனியாவில் இருந்து ஒரு டிரைவரை போர் பகுதிக்கு அழைத்து வர முடியவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு பேர் வேனை ஓட்ட முன் வந்தனர். அவர்கள் முற்றிலும் அற்புதமானவர்கள். அவர்கள் தங்கள் உயிரை ஆபத்தில் ஆழ்த்தினர் என்றார்.

விலங்குகளை ஏற்றி சென்ற வேன் ருமேனியாவின் சிரட் எல்லை வழியாக செல்ல அதிகாரிகளால் அனுமதியை பெற முடியவில்லை. இதனால் இரு நாடுகளின் பொதுவான எல்லை வழியாக வேன் சென்றது. மேற்கில் இருந்து கிழக்கில் சுமார் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்தனர். மேலும் உயரமான கார்பாத்தியன் மலைகளை கடந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )