ரஞ்சனின் விடுதலை தொடர்பில் ஆலோசனை

ரஞ்சனின் விடுதலை தொடர்பில் ஆலோசனை

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதற்காக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முன்மொழிவுகளை பெற்று அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இதன்படி, மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு ஐ.தே.கவின் செயலாளர் வஜிர அபேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், உர நெருக்கடிக்கு தீர்வு காணும் பொறுப்பு ஐ.தே.கவின் உப தலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இறக்குமதியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது கிடைக்கப்பெற்ற முன்மொழிவுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று நாளை இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதே இதன் நோக்கம் எனவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )