லசித் மாலிங்க மீண்டும் களத்தில்!… 5 விக்கட்டுகளால் இலங்கை அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா பிரதமர் அணிக்கும் மற்றும் சுற்றுலா இலங்கை அணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது பயிற்சிப் போட்டியில் 5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய பிரதமர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது .

எடம் வொஜஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் விக்ரம் சஞ்சய 3 விக்கட்டுக்களையும் , இசுரு உதான மற்றும் லசித் மாலிங்க தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.

170 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதில் இலங்கை அணி சார்பில் நிரோசன் திக்வெல்ல 47 ஓட்டங்களை பெற்ற நிலையில் , உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கென்பராவில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற மகளீர் உலக கிண்ண தகுதிகான் போட்டிகளில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை மகளீர் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளீர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்த நிலையில் 212 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இலங்கை மகளீர் அணி 47.4 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதனிடையே, இந்திய மற்றும் தென்னாபிரிக்க மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய மகளீர் அணி 49 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய மகளீர் அணி 8 விக்கட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த தென்னாபிரிக்க மகளீர் அணி 46.4 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )