பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக எமது பயணம் அமையும்

பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக எமது பயணம் அமையும்

(UTV | கொழும்பு) – விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மதரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் தினப் பாரம்பரியக் கொண்டாட்டங்களைக் கலாசார ரீதியாகச் சிறப்பாகக் கொண்டாடுவதன்மூலம், எதிர்காலத்தில் வளமான பயிர் அறுவடைக்குச் சூரியபகவானின் ஆசீர்வாதங்களும் பாதுகாப்பும் கிடைக்கின்றன என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகக் காணப்படுகின்றது.

சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள், காலங்காலமாக இலங்கைச் சமூகத்துடன் பின்னிப்பிணைந்திருக்கின்றன.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும்.

இது, பசுமை விவசாயத்துக்கான தேசிய கொள்கைக்குப் பலன்தரும் என்பதே பெரும்பான்மையானோரின் நம்பிக்கையாக இருக்கின்றது.

அதற்கான நோக்கத்துக்கு இந்தத் தைப்பொங்கல் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக நான் நம்புகிறேன்.

இந்த வருடமும், சுகாதாரத்துறையின் ஆலோசனைப்படி உங்களதும் உங்கள் அன்புக்குரியவர்களதும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலேயே தைப்பொங்கலை அனைவரும் கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )