கடன் பெற்றவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

கடன் பெற்றவர்களுக்கு  இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான நிவாரணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சகல அங்கிகாரம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு இது தொடர்பான அறிவித்தலை இலங்கை மத்திய வங்கி திங்கட்கிழமை (25) வெளியிட்டிருந்தது.

  • மே 15 வரை செயலிலுள்ள, செயலில் இல்லாத சகல கடன் வசதிகளுக்கும் ஆகஸ்ட் 31 வரை மீளச் செலுத்தும் நிவாரண காலம்.
  • இவ்வாறான நிவாரண காலப்பகுதிக்கு அறவிடப்படும் வருட வட்டி 6.18%.
  • இந்தச் சலுகையினூடாக ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை நிலுவைக் காலம் நீடிக்கப்படும் வசதிகளில் தொழிற்படு மூலதனம், அடகு, தற்காலிக மேலதிகப் பற்றுகள், குறுங்கால நிதி வசதிகள் போன்றனவும் அடக்கம்.
  • மே 15 முதல் ஆகஸ்ட் 31 வரையான நிவாரண காலப்பகுதிக்கு தண்ட வட்டி அறவீடு மேற்கொள்ளப்படக்கூடாது.
  • இந்த நிவாரண வசதியை வழங்குவதற்காக வங்கிகளால் மேலதிக கட்டணங்களை அறவிட முடியாது.
  • ரூ. 500,000க்கு குறைந்த பெறுமதியான காசோலைகளின் செல்லுபடியாகும் காலம் ஜுன் 30 ஆம் திகதி வரை நீடிப்பு.
  • காசோலை மீளத் திரும்பல்கள் மற்றும் காசோலை கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய சகல அறவீடுகளையும் ஜுன் 30 ஆம் திகதி வரை நிறுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தல்.
  • கடன் அட்டைகள் மற்றும் இதர கடன் வசதிகள் மீதான காலம் தாழ்த்திய கொடுப்பனவுக் கட்டணத்தை ஜுன் 30 ஆம் திகதி வரை அறவிடுவதை நிறுத்துவதுடன், முற்கூட்டியே செலுத்தித் தீர்ப்பதற்கான கட்டண அறவீட்டை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல்.
  • ஜுன் மாதம் 21ஆம் திகதி வரை புதிய நிவாரணத்துக்கு தகைமை வாய்ந்த வாடிக்கையாளர்கள் கோரலாம்.
  • ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் மீளச் செலுத்தல் சலுகைகளை தற்போது அனுபவிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய நிவாரணச் சலுகைக்கு தகைமை பெறமாட்டார்கள்.
  • தொடர்ந்தும் தமது கடன் பெறுகைகளுக்கான மீளச் செலுத்தல்களை மேற்கொள்ளக்கூடியவர்கள், தொடர்ந்து மீளச் செலுத்துமாறும் அறிவுறுத்தல்.

மே மாதம் 15 ஆம் திகதி வரை தொழிற்படு நிலையில் காணப்பட்ட கடன் வசதிகளை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை அதே நிலையில் பேணும் வகையில் மீளச் செலுத்தப்படுவதை மீளமைப்பது அல்லது காலம் தாழ்த்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக் கொண்ட கடன் வசதிகளின் முதல், வட்டி அல்லது இரண்டையும், அவர்களின் வியாபார சூழ்நிலையை (தொழில் இழப்பு, வருமானம் அல்லது சம்பளத்தில் குறைப்பு அல்லது இழப்பு, வியாபாரம் மூடப்பட்டுள்ளமை) கவனத்தில் கொண்டும், நிதி நெருக்கடிகளை கவனத்தில் கொண்டும் இந்தச் சலுகையை வழங்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட கடன் வசதிகளை மீளச் செலுத்தப்படுவதை, மீளக் கட்டமைக்கும் போது, 364 நாட்களுக்கு மேற்படாத மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற திறைசேரி பத்திர ஏல விற்பனை பெறுமதியின் போது நிலவிய பெறுமதியுடன் 1% தொகையை இணைத்து (5.18% + 1% = 6.18%) அவ்வாறு மீளமைக்கப்படும் காலப்பகுதிக்கு மாத்திரம், மீளமைக்கப்படும் தொகையின் மீது மட்டும் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணயக் கடன்களாயின், தற்போது நிலவும் குறைந்த வட்டி வீதங்களைக் கவனத்தில் கொண்டு, சாதாரண வட்டி வீதத்தை வங்கி அறிவிடலாம்.

   

COMMENTS

Wordpress (0)
Disqus ( )